டிசம்பர், 2016 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: டிசம்பர் 2016

இப்பொழுதே அந்த நாள்

நர்சரி வகுப்பில் படிக்கும் என் பேத்தி மேகியும் கிண்டர்கார்டன் படிக்கும் அவளது சகோதரி கேட்டியும் சில போர்வைகளை தூக்கிக்கொண்டு வீட்டின் பின்புறம் நோக்கிச் சென்றனர். அங்கு போர்வையால் கூடாரம் அமைத்து அதில் விளையாட முயன்றனர். கொஞ்ச நேரம் கழித்து மேகி தனது தாயாரை அழைக்கும் சத்தம் கேட்டது.

“அம்மா, இங்கே சீக்கிரம் வாங்க!” என கத்தினாள். “நான் இயேசுவை எனது உள்ளத்தில் அழைக்க விரும்புகிறேன், அதற்கு உதவி செய்யுங்கள்” என்று பின்பு கூறினாள். விளை யாடிக்கொண்டிருந்த பொழுது திடீரென அவள் தன் வாழ்விற்கு இயேசு மிகவும் தேவை என்பதை உணர்ந்து அவர் மேல் அவளது விசுவாசத்தை வைக்க முடிவுசெய்தாள்.

இயேசுவை விசுவாசிக்க உதவியை நாடிய மேகியின் அவசர தொனியில் ஒலித்த குரலானது
2 கொரிந்தியர் 6ல் பவுல் இரட்சிப்பை பற்றிக் கூறிய வார்த்தைகளை நமக்கு நினைவு படுத்துகிறது. மேசியாவாகிய கிறிஸ்து நிச்சயமாகவே பூமியில் வந்துவிட்டார் என்றும், அவரது மரணமும், உயிர்த்தெழுதலின் மூலமும், “அநுக்கிரக காலம்” ஆரம்பித்ததை குறித்தும் போதித்து வந்தார். நாம் அப்படிப்பட்ட கால கட்டத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். இன்று இரட்சிப்பு அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. “இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்” (2 கொரி. 6:2) என்று அவர் கூறினார். யாரெல்லாம் பாவமன்னிப்பிற்காக இயேசுவை இன்னும் விசுவாசிக்க வில்லையோ, உங்களுக்கு இதுவே சரியான நேரம் ஆகும். மிகச் சீக்கிரமாக இந்த முடிவை எடுப்பது மிகவும் அவசியமாகும்.

ஒருவேளை பரிசுத்த ஆவியானவர் நீங்கள் இயேசுவின் மேல் விசுவாசம் வைப்பதற்கான தேவையை உங்கள் உள்ளத்தில் தோன்றச் செய்திருக்கலாம். மேகியைப் போல் நீங்களும் உடனே ஏற்றுக்கொள்ளுங்கள். இயேசுவண்டை ஓடி வாருங்கள். இன்றே அந்த நாள்.

தேவனோடு தனித்திருத்தல்

அன்றைய தினத்தில் காலைவேளையில் சபையின் ஓர் அறை மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. ஒரு டஜன் குழந்தைகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு நான் உதவியாளராய் இருந்தேன். சற்று நேரத்தில் அறையின் சீதோஷண நிலைமாறி வெப்பம் அதிகரித்தது. அதனால் நான் கதவைத் திறந்து வைத்தேன். ஒரு சிறுவன் இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு யாரும் பார்க்காத வேளையில் தப்பித்து ஓடினான். நானும் பின் தொடர்ந்து ஓடினேன். அப்பொழுது அவன் தன் தந்தையிடம் ஓடிச் சென்றதைக் கண்டு நான் ஆச்சரியம் அடையவில்லை.

பரபரப்பான வாழ்க்கையில் நாம் சிக்கிக் கொள்ளும்போது அந்த சிறுவன் செய்ததைதான் நாமும் செய்ய வேண்டும். அதாவது அவன் தன் தந்தையிடம் சென்றான். இயேசு தன்னுடைய பரலோக பிதாவோடு நேரம் செலவிடவும் ஜெபிக்கவும் வாய்ப்புகளைத் தேடினார். மாம்சத்தில் அவரது பெலனை எல்லாம் ஊழியத்திற்கு செலவிட்ட போது இப்படி தனித்திருந்து தான் அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் என்று சிலர் கூறுவதுண்டு. மத்தேயு எழுதின சுவிசேஷத்தில், இயேசு தனித்திருக்க எண்ணி தனிமையான இடத்தை நோக்கிச் செல்வதைக் காணலாம். அப்போது அவரை மக்கள் சூழ்ந்து கொண்டு பின் தொடர்ந்தனர். அவர்களது தேவை அறிந்த இயேசு அற்புதமாய் சுகமும் உணவும் அளித்தார். “அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்” (மத். 14:23).

இயேசு திரும்ப திரும்ப அநேக ஜனங்களுக்கு உதவி செய்தார். ஆனால் அவர் பரபரப்புடனோ, சோர்வுடனோ காணப்படவில்லை. அவர் தேவனோடு கொண்ட நல்லுறவை ஜெபத்தினால் எப்போதும் ஸ்திரப்படுத்திக் கொண்டேயிருந்தார். நீங்கள் எப்படி செயல்படுகின்றீர்கள்? தேவனை அநுபவித்து அவரது அன்பையும், பெலனையும், முழுமையையும் அறிந்து கொள்ள ஆர்வத்துடன் அவரோடு நேரம் செலவிடவும், தனித்திருக்கவும் செய்கிறீர்களா?

முத்திரை மோதிரம்

வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு நண்பரை நான் முதன் முதலாக சந்தித்த பொழுது, மிடுக்காக தொனித்த அவரது ஆங்கில உச்சரிப்பையும், அவரது சிறு விரலில் அணிந்திருந்த மோதிரத்தையும் நான் கவனித்தேன். பின்னர் அது வெறும் அலங்கார அணிகலன் அல்ல என்பதை அறிந்து கொண்டேன். அதில் பொறிக்கப்பட்ட சின்னம் அவரது குடும்பத்தின் வரலாற்றை வெளிப்படுத்தியது.

சொல்லப்போனால், ஆகாய் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட முத்திரை மோதிரம் போல அதை எண்ணலாம். இந்த சிறிய பழைய ஏற்பாட்டு புத்தகத்தில் ஆகாய் தீர்க்கதரிசி தேவ ஜனத்தை மீண்டுமாய் ஆலயத்தை கட்டும்படி அழைக்கிறார். அகதிகளாய் இருந்தவர்கள் தங்களது தாய் நாட்டிற்கு திரும்பிய பின் அவர்கள் மீண்டும் தேவாலயத்தை கட்டிக்கொண்டிருக்கும் போது, எதிரிகள் மூலமாய் பிரச்சனை கிளம்பியது. அவர்களது எதிர்ப்பால் கட்டும் பணிகள் முடங்கியது. அப்போது ஆகாய் தீர்க்கதரிசி செருபாபேலை நோக்கி தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூதாவின் தலைவராகவும், தேவனுடைய முத்திரை மோதிரமாகவும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருப்பதை அவர் செருபாபேலுக்கு நினைப்பூட்டினார்.

ஆதிகாலத்தில் முத்திரை மோதிரம் ஓர் அடையாளச் சின்னமாக விளங்கியது. அவர்களது கையெழுத்திற்கு பதிலாக அவர்கள் அணிந்த முத்திரை மோதிரத்தை உருக்கிய மெழுகிலோ அல்லது மிருதுவான களிமண்ணிலோ அழுத்தி அதன் அடையாளத்தை எடுப்பார்கள். கிறிஸ்துவின் நற்செய்தியை நாம் பகிர்ந்து கொள்ளும் போதும், அவரது கிருபையை நம்மை சுற்றியுள்ள அயலானிடத்தில் வெளிப்படுத்தும் போதும், தீமையின் கட்டுகளில் இருந்து மக்களை விடுவிக்க போராடும் போதும் நாம் அனைவரும் தேவனுடைய பிள்ளைகளான அடையாளத்தை இவ்வுலகத்தில் முத்திரை பதிக்கிறோம்.

நாம் ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். நமது தாலந்துகளையும், ஆசைகளையும், ஞானத்தையும் நாம் வெளிப்படுத்தும் போது அது மற்றவரைப் போல் இல்லாமல் தனித்துவம் வாய்ந்ததாய் அமைகின்றது. அப்படி செய்கையில் நாம் தேவனின் சாயலை புதுமையான விதத்தில் வெளிப்படுத்துகின்றோம். இந்த பூமியில் தேவனுடைய முத்திரை மோதிரமாய் விளங்குவது நமக்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சிலாக்கியமாகும்.

அன்பிற்குள் அடைக்கப்பட்டு

ஜூன் 2015ல் பாரீஸ் நகரில் உள்ள பான்ட் டெஸ் ஆர்ட்ஸ் (Pont des Arts) நடைபாலத்தில் உள்ள கம்பிகளில் இருந்து 45டன் எடை கொண்ட பூட்டுகளை நீக்கினர். அன்பின் நினைவுச்சின்னமாக தம்பதிகள் தங்களது பெயர்களை ஓர் பூட்டில் எழுதி, பாலத்தின் கம்பியில் அதை பூட்டி சாவியை கீழே ஓடும் சியன் (River Seine) ஆற்றில் போட்டுவிடுவர்.

ஆயிரக்கணக்கான மக்கள் இச்செயலில் ஈடுபட்டத்தினால், அந்த “அன்பின்” கனத்தை அப்பாலத்தினால் தாங்க முடியவில்லை. கடைசியில் நகர நிர்வாகம், பாலத்தை பாது காப்பதற்காக இந்த “அன்பு பூட்டு” களை நீக்கியது.

முடிவில்லா அன்பின் அடையாளச் சின்னமாக அந்த பூட்டுகள் எண்ணப்பட்டது. ஆனால் உலகப்பிரகாரமான அன்பு கடைசி வரை நீடிப்பதில்லை. நெருங்கிய நண்பர்களுக்கு இடையே கூட மனக்கசப்பு ஏற்பட்டு மன்னிக்காமல் கூட இருந்தும் விடலாம். குடும்பத்தினரிடையே சண்டை ஏற்பட்டு வாக்குவாதங்கள் முளைக்கலாம். அவர்கள் மற்றொருவரை மன்னிக்காமலேயே இருந்து விடலாம். எதற்காக திருமணம் செய்தோம் என்ற எண்ணத்தையே மறந்துபோன நிலையில் மனதளவில் பிரிந்த நிலையில் கணவனும், மனைவியும் வாழலாம். காரணம் மனிதனின் அன்பு நிலையற்றது.

ஆனால் சகலத்தையும் தாங்கும் நிலையான அன்பு ஒன்று உள்ளது-அதுதான் தேவனின் அன்பு. “கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை (அன்பு) என்றுமுள்ளது.” நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும் முடிவில்லாத தேவனின் அன்பை எடுத்துரைக்கும் வாக்குத்தத்தங்கள் வேதம் முழுவதிலும் நிறைந்திருப்பதைக் காணலாம். அவரது அன்பின் மிகச்சிறந்த அடையாளச் சின்னமாய் விளங்குவது அவரது குமாரனின் சிலுவை மரணம் தான். அதைக் கண்டு அவர்மேல் விசுவாசம் வைப்பவர் நித்திய வாழ்வை பெறுவர். அதன் பின்னர் ஒருவராலும் அவரது அன்பை விட்டு நம்மை பிரிக்க முடியாது (ரோம. 8:38-39).

அன்பான விசுவாசிகளே, நித்தியத்திற்கும் நாம் தேவனின் அன்பிற்குள் ‘பூட்டப்பட்டிருக்கிறோம்.’

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்பினிமித்தம்

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பது என்பது உங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலப்படுத்துகிறது. ஆனால் உயர்நிலை பள்ளியில் படிக்கும் ஒரு வீராங்கனைக்கு ஓட்டப்பந்தயம் என்றால் தள்ளிக்கொண்டுபோவது என்று விளங்கியிருக்கிறது. ஒவ்வொரு பயிற்சியின்போதும், பதினான்கு வயது நிரம்பிய சூசன் பெர்க்மான் தன்னுடைய மூத்த சகோதரன் ஜெஃப்ரியை  அவனுடைய சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டே ஓடுவாள். ஜெஃப்ரி பிறந்து இருபத்தி இரண்டு மாதத்தில் அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அதின் விளைவாய் கடுமையான மூளை பாதிப்பு மற்றும் பெருமூளை வாதம் ஏற்பட்டது. இன்று சூசன் தன்னுடைய சகோதரனுக்காக அவளுடைய தனிப்பட்ட ஓட்டப்பந்தய இலக்குகளை தியாகம் செய்துவிட்டாள். ஆகையினால் ஜெஃப்ரியும் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ளமுடிகிறது. இந்த தியாகமான அன்பு ஆச்சரியப்படவைக்கிறது.  
பவுல் அப்போஸ்தலர் “ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்” என்று எழுதும்போது இந்த அன்பையும் தியாகத்தையும் சிந்தையில் வைத்தே எழுதியிருக்கிறார் (ரோமர் 12:10). ரோமத் திருச்சபையில் இருக்கும் விசுவாசிகள் பொறாமை, கோபம் மற்றும் ஆழமான கருத்து வேறுபாடுகளுடன் போராடுகிறார்கள் என்பதை பவுல் அறிந்திருந்தார் (வச. 18). எனவே, தெய்வீக அன்பு அவர்களின் இதயங்களை ஆள அனுமதிக்கும்படி அவர் அவர்களை ஊக்குவித்தார். கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றிய இந்த வகையான அன்பு, மற்றவர்களுக்கு மேன்மையான நன்மையை கொடுக்க பிரயாசப்படும். அது நேர்மையானதாகவும், தயாள குணம் படைத்ததாகவும் வெளிப்படும் (வச. 13). இந்த வழியில் அன்பு செலுத்துகிறவர்கள் தங்களைக் காட்டிலும் மற்றவர்களை கனம் பெற்றவர்களாய் கருதுவார்கள் (வச. 16).  
கிறிஸ்தவர்களாகிய நாம், மற்றவர்களுக்கு துணைபுரிந்து ஓட்டத்தை நேர்த்தியாய் ஓடச்செய்து இலக்கை அடையச்செய்யும் அன்பின் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். அது கடினமானதாய் தெரிந்தாலும் அது இயேசுவுக்கு கனத்தைக் கொண்டுவருகிறது. அன்பினிமித்தம் நாம் அவரை சார்ந்துகொண்டு, மற்றவர்களை நேசிக்கவும் அவர்களுக்கு சேவை செய்யவும் பிரயாசப்படுவோம்.  

எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?

“ஐயோ!” எனக்கு முன்பாக போய்க்கொண்டிருந்த பழுதுபார்க்கும் லாரி திடீரென்று திரும்பியதால் நான் அலறினேன்.  
அந்த வாகனத்தில் பின்புறம் “எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?” என்று கேட்டு அதற்கு கீழ் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டேன். நான் ஏன் அழைக்கிறேன் என்று ஒரு பெண் என்னிடம் கேட்டார். நான் என் விரக்தியை கோபமாய் வெளிப்படுத்தினேன். டிரக்கின் நம்பரை குறித்துக்கொண்டாள். பின்னர் அவள், “எப்போதும் நன்றாக வாகனம் ஓட்டும் ஒருவரைக் குறித்து சொல்லுவதற்கும் நீங்கள் எங்களை அழைக்கலாம்” என்று சோர்வுடன் சொன்னாள். 
அவளுடைய அந்த சோகமான வார்த்தைகள் என்னை தடுமாறச் செய்தது. என் தவறை நான் உணர்ந்தேன். எனக்கு நியாயம் வேண்டும் என்பதற்காக, நான் பேசிய கோபமான வார்த்;தைகள் அந்த கடினமான வேலை செய்யும் பெண்ணை எந்த அளவிற்கு காயப்படுத்தியிருக்கவேண்டும் என்று யோசித்தேன். என்னுடைய விசுவாசத்திற்கும் கனிகொடுக்கும் ஜீவியத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு அற்றுபோனதாக அவ்வேளையில் நான் உணர்ந்தேன்.  
நம்முடைய செய்கைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைத் தான் யாக்கோபு நிருபம் வெளிப்படுத்துகிறது. யாக்கோபு 1:19-20இல் “ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே” என்று வாசிக்கிறோம். மேலும் அவர், “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (வச. 22) என்றும் ஆலோசனை கூறுகிறார்.  
நாம் யாரும் நேர்த்தியானவர்கள் இல்லை. சில வேளைகளில் நம்முடைய வாழ்க்கை என்னும் வாகனத்தை ஓட்டும்போது, நம்முடைய கடினமான வாழ்க்கைப் பாதையில் அவர் நம்முடைய கடினமான சுபாவங்களை மாற்றுவார் என்று நம்பி அவரை சார்ந்துகொள்ள முற்படுவோம்.

தேவன் பார்க்கிறார், புரிந்துகொள்கிறார், பாதுகாக்கிறார்

சில நேரங்களில், நாள்பட்ட வலி மற்றும் சோர்வுடன் வாழ்வது என்பது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு தனக்கு யாருமில்லை என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. தேவனோ அல்லது மற்றவர்களோ என்னை பார்க்கவில்லை என்பதை நான் உணர்ந்தேன். எனது நாயுடன் அதிகாலையில் நான் ஜெபநடை ஏறெடுக்கும்போது, இதுபோன்ற உணர்வுகள் என்னை வெகுவாய் பாதித்தது. தூரத்தில் காற்று நிரப்பப்பட்ட பெரிய பலூன் பறந்து சென்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அதில் பயணம் செய்யும் நபர்கள் பூமியை உயரத்திலிருந்து பார்த்து ரசிக்கமுடியும். நான் என் அயலவர்களின் வீடுகளை நடந்து கடந்தபோது, பெருமூச்சு விட்டேன். அந்த மூடிய கதவுகளுக்குப் பின்னால் எத்தனை பேர் கண்ணுக்குத் தெரியாதவர்களாகவும் முக்கியமற்றவர்களாகவும் உணர்கிறார்கள்? நான் என் நடைப்பயணத்தை முடித்தவுடன், நான் அவர்களைப் பார்க்கிறேன், அவர்களைக் கவனித்துக்கொள்கிறேன் என்பதை என் அண்டை வீட்டாருக்குத் தெரியப்படுத்த எனக்கு வாய்ப்புகளைத் தரும்படி தேவனிடம் கேட்டேன். அவரும் அப்படித்தான். 
தேவன் எத்தனை நட்சத்திரங்களைப் படைத்தார் என்னும் தொகை அவருக்கு தெரியும். ஒவ்வொரு நட்சத்திரங்களையும் அவர் பேர்சொல்லி அழைப்பது (சங்கீதம் 147:5), சிறு விஷயங்களுக்கும் அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காண்பிக்கிறது. அவருடைய வல்லமை, ஞானம், பகுத்தறிவு ஆகியவைகள் காலவரம்பற்றவைகள் (வச. 5). 
தேவன் ஒவ்வொரு அவிசுவாசத்தின் அழுகையையும் கேட்கிறார்; ஒவ்வொரு அமைதியான கண்ணீரையும் அவர் தெளிவாகக் காண்கிறார். ஒவ்வொரு திருப்தி பெருமூச்சையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் எப்போது தடுமாறுகிறோம், எப்போது வெற்றிபெறுகிறோம் என்பதை அவர் பார்க்கிறார். நம்முடைய ஆழ்ந்த அச்சங்களையும், நமது உள்ளார்ந்த எண்ணங்களையும், நம்முடைய பயங்கரமான கனவுகளையும் அவர் புரிந்துகொள்கிறார். நாம் எங்கு இருந்தோம், எங்கு செல்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். நம் அண்டை வீட்டாரைப் பார்க்கவும், கேட்கவும், நேசிக்கவும் தேவன் நமக்கு உதவுவதால், நம்மைப் பார்க்கவும், புரிந்து கொள்ளவும், கவனித்துக் கொள்ளவும் அவரை முழுமையாய் நம்பலாம்.